Sunday, December 26, 2010

தென்மேற்குப் பருவக் காற்று - திரைப்பட விமர்சனம்

26-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த வருடத்திய இறுதிக் கணத்தில் வெளியாகியிருக்கும் மிகச் சிறந்த திரைப்படம் இது. நினைக்கவே இல்லை இப்படியிருக்கும் என்று.. படத்தின் பாடல்களை இணையத்தில் கேட்டபோது தமிழ் மணத்தது. படத்திலோ தமிழ் மண்ணின் மணம் மணக்கிறது. 'கூடல் நகர்' படத்தை இயக்கிய சீனு ராமசாமியின் இரண்டாவது திரைப்படம் இது.!

ஆட்டுக் கொட்டாயை மேய்த்துவரும் வாலிபனுக்கும், ஆட்டுக்கிடாக்களை ராவோடு ராவாக திருடும் குடும்பத்துப் பெண்ணுக்குமான காதலைச் சுவையோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர்.. இதற்குப் பின்புலமாக  வெள்ளந்தியான கிராமத்துத் தாய்களில் ஒருத்தியான வீராயியையும்  நமக்கு அடையாளம் காட்டுகிறார்.


வீராயி என்னும் சரண்யா கைக்குழந்தை இருக்கையிலேயே விதவையானவர். தான் வாழப் போன ஊரைவிட்டு வந்து வயல்பட்டியில் குடியேறி தன் மகனுக்காகவே இன்னமும் உழைத்துக் கொண்டிருப்பவள்.

ஆடுகளை வளர்த்து விற்கும் தொழிலைச் செய்து வரும் மகன் முருகையன், தனது ஆட்டுக் கொட்டாயில் நள்ளிரவில் ஆடுகளை ஆட்டையைப் போட வரும்போது களவாணிக் கும்பலில் இருக்கும் பேச்சியைப் பார்த்து மூச்சுப் பேச்சின்று போய்விடுகிறான்.

ஆத்தா வீராயி மகனுக்கு ஒரு கால்கட்டுப் போட்டுவிட்டால் பையன் வீட்டுக்கு அடங்கி குடியை மறந்திருப்பான் என்று நினைத்து தனது உறவிலேயே கலைச்செல்வியை பார்த்து வெத்தலை மாத்தி பரிசம் போட்டு வைத்திருக்கிறாள்.

முருகையன் ஆடுகளை மீட்க போலீஸின் உதவியைத் தேட.. இதனால் கோபமான பேச்சியின் அண்ணன் முருகையனை தேடி வந்து அடித்துவிடுகிறான். இந்தக் கோபத்தில் முருகையன் பேச்சியின் குடும்பத்தைக் கை காட்டிவிட பேச்சியின் குடும்பத்தில் ஆண்கள் அனைவரும் சிறைக்குள் போகிறார்கள்.


“களவாணிக் குடும்பத்தில் பெண்ணெடுக்கவா நான் இத்தனை வருஷமா இந்த புழுதிக் காட்டுல ஆடா, மாடா உழைச்சிருக்கேன்..” என்று மறுக்கிறாள் ஆத்தா வீராயி. முருகையனோ “உன்னைத் தவிர வேறு எவளும் எனக்குப் பொண்டாட்டியா வர முடியாது..” என்று பேச்சியிடம் வாக்குக் கொடுக்க.. இது நடந்ததா இல்லையா என்பதுதான் கதை..

இயக்குநருக்கு முதல் பாராட்டு. இப்படியொரு மண்ணும், மண் சார்ந்த கதையையும் தேர்ந்தெடுத்ததற்கு.. காதலை வைத்திருந்தும் காமத்தைத் துளிக்கூட காட்டாமலும், தாய்ப்பாசத்தை வைத்திருந்தும் அது முட்டாள்தனமாக இல்லாமல் தாயின் பரிதவிப்பையும் ஒரு சேர உணர்த்தியிருக்கும் அந்த நேர்மைக்கு எனது சல்யூட்..

புழுதி பறக்கும் இந்தக் காட்டில் ஒத்தைப் பொம்பளை தானே ஏர் பூட்டி உழுது கொண்டிருக்கும் காட்சியில் நடிகை சரண்யாவை மறக்க வேண்டியிருக்கிறது.. சரண்யாவின் நடிப்பு கேரியரில் மிகச் சிறந்த படம் இது..

மகன் குடிக்கிறானே என்ற கவலையுடன் அவனை விரட்டி விரட்டி அடிப்பது.. குடித்துவிட்டு வயலில் வந்து விழுந்து “பசிக்குதும்மா..” என்று கேட்பவனிடம் தூக்குவாளியைக் கொண்டாந்து வைத்துவிட்டு கடுகடுப்போடு செல்லும் அந்தக் கிராமத்துத் தாய்போல் பலர் எத்தனையோ ஊர்களில் இன்னமும் இருக்கிறார்கள்.. பையனுக்கு பேசி முடிக்க மிக எளிமையாக சுருக்குப் பையில் இருந்து காசை எடுத்து வெத்தலையை தம்பியிடமே வாங்கி பரிசம் போடும் அந்தக் காட்சியில் எந்த ஆடம்பரமும் இல்லை.


ஆடு காணாமல் போன கதையை விசாரிக்க வரும் போலீஸிடம் “ஏய் போலீஸு.. களவாண்டவங்களை பார்த்த ஆளு இருக்கு” என்று எகத்தாளமாக சொல்கின்ற அழகு.. மகன் ரத்ததானம் கொடுக்கச் சென்ற இடத்தில் “எவண்டா ஏன் புள்ளைகிட்ட ரத்தம் எடுக்குறது..?” என்று புரியாமல் சவுண்டு விடும் கோபம்.. கலைச்செல்வியின் தந்தை வீட்டு வாசலில் வந்து நின்று மண்ணை வாரி இறைத்துவிட்டுப் போகும்போது காட்டுகின்ற அந்த பரிதவிப்பு. பேச்சியின் வீட்டிற்கே சென்று அவர்களுடன் சண்டையிடுவது.. என்று சரண்யா அசத்தல் ஸ்கோர் செய்திருக்கிறார். இது அவருக்கு 100-வது படம் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள் மேடம்.. இன்னும் அசத்துங்கள்..

கலைச்செல்வியாக நடித்த அந்தப் பெண்ணைத் தேர்வு செய்த இயக்குநருக்கு தனி ஷொட்டு.. கருமை என்றாலும் பளிச்.. தன்னை நிராகரித்த ஹீரோவிடம் திரும்பி வந்து அவருடைய புகைப்படத்தைக் கொடுத்து “இனிமே இது என்கிட்ட இருக்கக் கூடாது மாமா..”  என்று சொல்லி நீட்டுகின்ற இடத்தில் தியேட்டரில் அப்ளாஸ் பறந்தது. இது மட்டுமல்ல.. உதயம் தியேட்டரில் 5 இடங்களில் வசனத்திற்காகவே மக்கள் கை தட்டினார்கள். ஆச்சரியம் பிளஸ் இன்ப அதிர்ச்சி.

“களவாணிக் குடும்பத்துல பொண்ணெடுக்க உங்கம்மா சம்மதிப்பாங்களா?” என்று பேச்சி கேட்டவுடன் ஹீரோ நிற்க.. “பார்த்தீங்களா நின்னுட்டீங்க..?” என்று திரும்பவும் பேச்சி சொல்கிற காட்சி டாப் கிளாஸ்.. அதேபோல் பேச்சியை ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஹீரோ அழைத்துவிட்டுப் போனவுடன் பேச்சியின் குடும்பத்தினர் ஆளாளுக்கு அவளுக்கு அட்வைஸ் செய்கின்ற சீனையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்..

கிராமத்து வாசனைத் தெறிக்கும் அத்தனையையும் பிரேம் டூ பிரேம் வைத்துச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்கு கை கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் செழியனையும் பாராட்டத்தான் வேண்டும்.

ஆட்டுக் கொட்டடியை விடியலில் பார்க்கின்றபோது தெரிகின்ற இடங்களெல்லாம் ஆண்டிபட்டியைச் சுற்றியிருக்கும் இடங்களாம்.. நம்ம ஊர்ப் பக்கம்தான் இத்தனை அழகா என்று சிலிர்க்க வைக்கிறது.. இதேபோல் சரண்யா ஆஸ்பத்திரிக்கு பேருந்தில் செல்லும்போது பேருந்தை காட்டும் லாங் ஷாட்டில் ஊரே அழகுடன் தெரிகிறது.

பாடல் காட்சிகளிலும், ஹீரோ ஹீரோயினை விரட்டிச் செல்லும் களிமண் பூமியை அழகுற காட்டி அசத்தியிருக்கிறார் செழியன். இன்னமும் நாம் பார்க்க வேண்டிய நமது மண்ணின் வாசனை நிறையவே இருக்கிறது..


சேவல் சண்டையில் நடக்கும் சாராயப் பிரச்சினையைப் பெரிதாக்கி சண்டையை மூட்டிவிட.. சரண்யா விஷயம் தெரிந்து சண்டையிட்டவனின் வீட்டுக்கே போய் வாய்ச்சண்டை போட்டு அந்தக் கோப்பையைக் கொண்டு வந்து தன் வீட்டுக்குள் எறிந்துவிட்டு அலட்சியமாக செல்கின்ற காட்சி ஒரு அழகான சிறுகதை.. அந்தக் கோப்பையின் மதிப்பு தெரியாத அம்மா.. ஆனால் மகனின் வருத்தம் தெரிந்த அம்மா.. எவ்ளோவ் பெரிய முரண்பாடு பாருங்கள்..?

பேராண்மை படத்தில் நடந்த வசுந்தராதான் இதில் பேச்சியாக உருமாறியிருக்கிறார். இயக்குநர்களிடத்தில் தங்களை நம்பி ஒப்படைத்துவிட்டால் இது போன்ற அருமையான கேரக்டர்கள் சிறந்த நடிப்பிற்காகக் கிடைக்கும். வசுந்தராவுக்கு உறுத்தாத மேக்கப்பும், அலட்டாத, மிகையில்லாத நடிப்பும் மிகச் சரளமாக இதில் வந்திருக்கிறது..

ஹீரோவைப் பார்த்து பயந்து போய் ஓடும் வேகமும், கண்டுபிடித்தவுடன் முகத்திலேயே ஏதோ தெரியாத ஆளிடம் பேசுவது போல பேசுகின்ற தொனியும் இயக்குநரின் திறமையையும் தாண்டி வசுந்தராவின் நடிப்பைக் காட்டுகிறது.. அவருடைய முகத்தைக் காட்டியே காட்சிகளை சிற்சில இடங்களில் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

இறுதிக் காட்சியில் வைத்திருக்கும் அந்த ட்விஸ்ட்டை ஆடியன்ஸே எதிர்பார்க்கவில்லை. அந்த நேரத்தில் சரண்யாவின் திடீர் மனமாற்றமும் ஏற்புடையதே.. எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் அவருடைய முடிவை ஏற்றுக் கொள்ளும் பேச்சியின் செயலும் சபாஷ் போட வைத்தன. தியேட்டரில் இந்த ஷாட்டிலும் கைதட்டல்கள் தூள் பறந்தன..

மருத்துவமனையில் சரண்யா சொல்கின்ற “பொண்டாட்டியை பரிதவிக்க விட்டுட்டுப் போயிராதடா..” என்ற வார்த்தைகளில் தனது 35 வருட கரிசல் காட்டு வாழ்க்கையை எழுதிக் காண்பிக்கும் யுக்தி அபாரம்.. சீனு ஸார்.. உங்களுடைய எழுத்து உங்களை நல்லதொரு இலக்கியவாதியாக காட்டியிருக்கிறது இத்திரைப்படத்தில்.. வாழ்க..

குறிப்பிட்டு பாராட்டுக் கூடிய இன்னொரு நபர் தீப்பெட்டி கணேசன். ரேணுகுண்டாவில் கலகலக்க வைத்தவர் இதிலும் அப்படியே.. ஆயிரம் ரூபாயை சுருக்குப் பையில் வைச்சிருந்தனே.. காணோமே? என்ற சரண்யாவின் பரிதவிப்பைக் கேட்டு 16 குவார்ட்டர் வாங்கிருக்கலாமே என்ற நக்கல் அங்கலாய்ப்பு செம கலகலப்பு.. படத்தின் துவக்கத்தில் இருந்தே இவரது கேரக்டர் ஸ்கெட்ச் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் துணையாய் இருக்கிறது.

கலைச்செல்வியின் தந்தையை தனியே அழைத்து தான் பேச்சியைக் காதலிக்கும் விஷயத்தை அவரிடம் சொல்ல.. குடித்துக் கொண்டிருந்த போதையில் கோபத்தை அடக்கிக் கொண்டு விலகிப் போகும் அவரது நடிப்பு பாராட்டுக்குரியது. இயக்குநர் அனைத்து வழிகளிலும் மிகைப்படுத்துதலை தொடாமல் சென்றிருக்கிறார்..


பாடல்கள் அனைத்தும் இன்னொரு பக்கம் களை கட்டியிருக்கின்றன. ஏற்கெனவே இணையத்தில் கேட்டிருக்கிறேன். வைரமுத்துவின் கைவண்ணத்தில் கரிசல்காட்டு பாடலும், கள்ளச் சிறுக்கி பாடலும் திரும்பத் திரும்ப முணுமுணுக்க வைக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு படத்தின் திரைக்கதையையே பாடல்களில் கொண்டு வந்திருப்பது இத்திரைப்படத்தில்தான் என்று நினைக்கிறேன். அத்தனை பாடல்களிலும் தமிழ் விளையாடியிருக்கிறது.. புதிய இசையமைப்பாளர் ரகுநந்தனுக்கு எனது பாராட்டுக்கள்..


ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத கேப்டன் ஐசக் என்பவர் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். வெறும் 36 நாட்களில் ஷூட்டிங்கை முடித்திருக்கிறாராம் இயக்குநர். ஆச்சரியம்தான்.. எத்தனை தெளிவாக திரைக்கதை எழுதி, எத்தனை வேகமாக எடுத்திருப்பார் என்று யோசிக்க வைக்கிறது. பாலுமகேந்திரா மற்றும் சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பயிற்சி பெற்றிருக்கும் சீனு ராமசாமியின் இத்திரைப்படம் நிச்சயமாக அவரது குருநாதர்களைப் பெருமைப்படுத்தும்..!

மிகக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்திருந்தாலும் நீண்ட காத்திருப்புக்குப் பின்பு ஆண்டு கடைசியில் வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயம் இது போன்ற திரைப்படங்களை ஆதரிக்க வேண்டியது நல்ல சினிமாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நம்முடைய கடமை..

அவசியம் குடும்பத்துடன் சென்று பாருங்கள்..!
Posted By: Unknown

தென்மேற்குப் பருவக் காற்று - திரைப்பட விமர்சனம்

Share:

Post a Comment

Facebook
Blogger

No comments:

Post a Comment

Follow Us

About Us

Advertisment

Like Us

© The Cine Hub All rights reserved | Theme Designed by Seo Blogger Templates